Friday, December 30, 2016

துத்திக் கீரை


சுமையான இலைகளை உடைய துத்திக் கீரை பருத்தி இனத்தைச் சார்ந்த ஒரு கீரை வகையாகும். மஞ்சள் நிறத்தில் அழகாக பூக்கும் இதன் இலை, பூ, காய், விதை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவை. துத்தியின் இலைகள் இதய வடிவில் இருக்கும். புதர்களாக சாலை ஓரங்களில் வளரும்.

மூலநோய் கட்டி முளை புழுப்புண்ணும் போகுஞ் 
சாலவதக் கிக்கட்ட தையலே-மேலும் அதை
எப்படியேனும் புசிக்க எப்பிணியுஞ் சாந்தமுறும்
இப்படியீற் றுத்தியிலை யை

                                                                      மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கிக் கட்ட மூல முலைகள் மற்றும் புண்கள் ஆறும் என துத்தியைப் பற்றி பதார்த்த குண சிந்தாமணி பாடலில் சொல்லப்பட்டிருக்கிறது.

நம் முன்னோர்கள் துத்திக் கிரையை  சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.

இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.

நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச்சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. 

துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம். 

துத்தி இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி மூலத்தில் கட்ட, மூலத்தில் உள்ள வீக்கம், வலி, குத்தல் மற்றும் எரிச்சல் நீங்கும்.

ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வலி இருக்கும் சமயம் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து அதை 100 மி.லி. நீரில் கொதிக்க வைத்துச் சிறிது பால், பனங்கற்கண்டு கலந்து பருக வலி குறையும்.

துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய் கொப்புளிக்க, பல் ஈறுகளில் ரத்தம் கசிவது நிற்கும். 

அதிகச் சூட்டினால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், உடலில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலை ஒரு கைபிடி எடுத்து 100 மி.லி. நீரில் கொதிக்கவைத்துப் பருகலாம்.

வெப்ப கட்டி மற்றும் மூலத்தில் உண்டாகும் கட்டிகளுக்கு துத்தி இலைச் சாறை அரிசி மாவில் களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால் வெப்பக்கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

உடலில் உள்ள தசைகளுக்கு பலத்தை அளிப்பதால் இதற்கு 'அதிபலா' என்ற வேறு பெயரும் உண்டு. 

இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் வலி நீக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. பல சித்த மருந்துகளில் துத்தி சேர்க்கப்படுகிறது.

வட மாநிலத்தில் உள்ள ஓர் இனத்தை சார்ந்த பழங்குடி மக்கள் துத்தி இலையின் பொடியை கோதுமை மாவுடன் கலந்து ரொட்டியாகத் தயாரித்துச் சாப்பிடுகின்றனர். கருப்பை சார்ந்த நோய்கள் தீர இவ்வாறு தயாரித்துச் சாப்பிடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.  

பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணம் தெரியும்.

மூலநோய் உள்ளவர்கள் துத்திக் கீரையை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் இந்த நோயில் இருந்து விரைவில் விடுதலை அடையலாம்.
துத்திக் கீரை கொண்டு தயாரிக்கக்கூடிய உணவுகள்...  

துத்திக் கீரை  சூப்

துத்திக் கீரை    - 100 கிராம் (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி    - 2    
சின்ன வெங்காயம்    - 10 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
பூண்டு    - 5 பல்
மிளகு    - 1/2 தேக்கரண்டி
சீரகம்     - 1 தேக்கரண்டி
நெய்    - 1 தேக்கரண்டி
உப்பு    - சுவைக்கேற்ப

செய்முறை: -  ஒரு வாணலியில் சிறிது நெய்விட்டு, அரிந்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம், துத்திக் கீரை மற்றும் பூண்டை அதில் இட்டு நன்கு வதக்கவும். பின்னர் அதில் அரை லிட்டர் நீர் கலந்து ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பின் மிளகு, சீரகத்தைப் பொடி செய்து நெய்யில் தாளித்துக் கலந்து, உப்பு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைத்துப் பரிமாறவும்.

இந்த சூப் 100 மி.லி. சாப்பிட, உடல் சூடு குறையும், உடல் வன்மை உண்டாகும், மூலச்சூடு குறையும். மூலத்தில் ஏற்பட்டுள்ள வலியும் நீங்கும், மலசிக்கல் தீரும்.

துத்திக் கீரை  கூட்டு

துத்திக் கீரை    -  200 கிராம்
சின்ன வெங்காயம்    -  100 கிராம்
வேகவைத்த துவரம்பருப்பு    - 3 மேஜைக்கரண்டி
மிளகு தூள்    - 1/2தேக்கரண்டி
சீரகம்    - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்    - 3 தேக்கரண்டி
உப்பு    - சுவைக்கேற்ப

செய்முறை: துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை பொடிதாக அரிந்துகொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சீரகம் தாளித்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை இட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும். கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

இந்தக் கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும், மூலத்தின் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.

மூல நோயால் துன்பப்படுபவர்கள் இந்தக் கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.

நன்றி : தினத்தந்தி, டாக்டர் இரா. பத்மப்ரியா (சித்த மருத்துவர்)

No comments:

Post a Comment